Posted by : Admin Saturday, 28 April 2012

உயர்ந்த விஞ்ஞானியாவதற்கு ஒருவன் அறிவியலில் ஆழ்ந்த ஞானம் அடைய வேண்டும். தேர்ந்த வழக்கறிஞராகவோ, சிறந்த மருத்துவராகவோ வர விரும்பினால், சட்டமோ, மருத்துவமோ
முறையாகக் கற்றாக வேண்டும். ஆனால், ஓர் அரசியல்வாதியாக உருவாவதற்குத் தன்னுடைய சொந்த நலன்களைப் பராமரிக்கத் தெரிந்தால்... அதுவே போதும்’ என்றார் அறிஞர் மேக்ஸ் ஓரேல். ஈழத் தமிழர் விவகாரத்தில் நம் அரசியல்
தலைவர்கள் அரிதாரம் பூசாமல் அன்றாடம் நடிக்கும் நாடகங்களைப் பார்த்தால், இந்தப் பொன்மொழிதான் பொருத்தமாகப்படுகிறது. ஈழம் ரத்த நிலமானபோது, அப்பாவித் தமிழ் மக்கள் பல்லாயிரவர் படுகொலை செய்யப்பட்டபோது, எம் குலப் பெண்டிர் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டபோது, வயது முதிர்ந்தோரும், வாய் திறந்து பேசவியலாத சின்னஞ்சிறாரும் வெடிகுண்டுகளில் உடல் சிதறி உருக்குலைந்த போது, உயிரிழந்தும் உறுப்பிழந்தும் உடைமையிழந்தும் எழுத்தில் வடிக்க முடியாத பேரழிவைச் சந்தித்து நம் தமிழினம் கண்ணீர்க் கடலில் மூழ்கிய போதும்... இந்திய அரசியல் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? தமிழ் இனத்தை அழிக்க இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு ஆயுதங்கள் தந்த போது, தெலுங்கானா காங்கிரஸ்காரர்களைப்போல், அன்னை சோனியாவின் அருட்பார்வைக்கு அன்றாடம் தவமிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் இனஉணர்வுடன் தொண்டர்களைத் திரட்டி தெருவில் நின்று குரல் கொடுத்தார்களா? நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கி ஆட்சி பீடத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்களா? இல்லையே. நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் பா.ஜ.க., மன்மோகன் சிங் அரசின் தவறான அணுகுமுறைகளால் ஈழம் எரிந்த போது, அதைத்தடுக்க எந்தெந்த வகைகளில் முயற்சி மேற்கொண்டது? அந்த நேரத்தில் தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர், தன் பதவி பறிபோகாமல் பாதுகாத்துக்கொள்வதற்கு நடத்திய நாடகங்கள் ஒன்றா? இரண்டா?

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -